ஈஷா கைவினை
அன்பின் வெளிப்பாடான ஈஷா கைத்திறன், கிராமப்புத்துணர்வு இயக்கத் திட்டத்திலிருந்து துளிர்த்த மொட்டு. கிராமப்புற மக்களின் இயல்பான படைப்புணர்வை வெளிக்கொண்டு வருவதையும், பாரம்பரியமாக பொருளீட்டும் வழிகளை வாழ்க்கை ஆதாரமாக நிலை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இது செயல்படுகிறது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இரண்டு பேர் மட்டுமே கொண்ட குழுவாகத் துவங்கிய ஈஷா கைவினைப் பகுதி, இன்றைக்கு, கோவை ஈஷா யோக மையத்தைச் சுற்றிலுமுள்ள கிராமங்களிலிருக்கும் கூடுதல் திறன்படைத்த ஆண்களும், பெண்களுமாக 50 பேர் கொண்ட குழுவாகி, சுற்றுச்சூழலுக்கு இசைவான, தரமான கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். கிராமப்புறக் கலைஞர்களின், வெளிப்படுத்தப்படாத உள்ளுணர்விலிருந்து எழுகின்ற கைவினைப் படைப்புத் திறனானது, ஈஷா வடிவமைப்புக் குழுவினரால் நெறிப்படுத்தப்பட்டு, சமகாலத்தின் தேவை மற்றும் இரசனைக்கேற்ப, வீட்டு அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகக் பொருட்கள், நவீன அழகுப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
உள்ளுரிலேயே கிடைக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கிசைவான அலங்காரக் கூடைகள், பலவிதப் பயன்பாடுகளையுடைய தட்டுகள், விளக்குகள், பாய்கள், நவீன பாணியிலான பருத்தி மற்றும் சணல் கைப்பைகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இயற்கையில் கிடைக்கக்கூடிய, எளிதில் மட்கக்கூடிய பொருள்களை, காலத்தின் தேவைக்கேற்ப, கண்ணைக் கவரும் வகையில், திறமையாக வடிவமைக்கப்பட்ட பொருட்களாக எப்படி மாற்ற முடியும் என்பதை ஒவ்வொரு பொருளும் நிச்சயப்படுத்துகிறது. தனித்துவமான கற்சிற்பங்கள், அலங்கார உருளிகள், மற்றும் உலோகப் கலைப்பொருட்கள் போன்றவைகள், உள்கட்டட வடிவமைப்பாளர்கள் மற்றும் இல்லத்தரசிகளால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
ஈஷா கைவினைத்திறனில் உருவான பொருட்கள், ஆரம்ப காலங்களில், கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற ஈஷா யோகா வகுப்புகள் மற்றும் உலகெங்குமுள்ள மற்ற ஈஷா மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபகாலமாக, இந்தியப் பெரு நகரங்களில் நடக்கும் கண்காட்சிகளிலும் அதன் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தொழில் முறை வடிவமைப்பாளர்களும், நுகர்வோரும், பொருட்களின் அற்புதமான கலைநயத்தை மிகவும் பாராட்டுகின்றனர். மேலும், சொசைட்டி இன்டிரியர்ஸ் நிறுவனம், 2006ம் ஆண்டு, சென்னையில் நடத்திய இந்தியக் கலை மற்றும் கைவினைக் கண்காட்சியில், மிகச்சிறந்த விற்பனையகத்திற்கான பரிசினை, ஈஷா கைவினைத் திறன் அரங்கு வென்றது.
சுற்றுச்சூழலுக்கு இசைவான பொருட்களுக்கான தேவை தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டில், சுமார் 2000 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள கிராம மக்களுக்கு, ஈஷா கிராமப்புத்துணர்வு இயக்கத்தின் மூலம் பயிற்சியளிப்பதன் மூலம் தனது உற்பத்தியைப் பெருக்க 'ஈஷா கைவினை' முடிவெடுத்து அதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது.
இந்த அழகிய படைப்புகள், கலையுணர்வின் அழகினை நம் வாழ்விற்குள் கொண்டு வருவதுடன், கிராம மக்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையைத் தருகிறது. ஈஷா கைவினைப் பொருட்களிலிருந்து பெறப்படும் வருவாய் கிராமப்புற சமுதாய நலனுக்கான பணிகளுக்காக செலவிடப்படுகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவின் கிராமப்புறங்களில் இயக்கப்படும் நடமாடும் மருத்துவமனைகளின் செலவினங்களுக்காக, அந்த நிதி செலவிடப்படுகிறது.