“விண்ணிலுள்ள , ஒவ்வொரு பால் மண்டலத்தின் மையமும், நீள் வட்ட வடிவத்தில்தான் இருக்கும். முழுமையான நீள் வட்ட வடிவத்தைத்தான் நாம் லிங்கம் என்று சொல்கிறோம். எனவே ஒரு வடிவம் படைப்பாக வெளிப்படும்பொழுது, எப்பொழுதுமே நீள்வட்ட வடிவத்தில்தான் இருக்கும்.
மேலும் நீங்கள் உங்களது சக்திநிலையை ஒரு குறிப்பிட்ட அளவு உயர்த்தும்போது, கரைந்து போவதற்கு முன்னால் அது எடுக்கும் கடைசி வடிவமும் நீள் வட்ட வடிவம்தான் என்பது, அனுபவத்தின் வாயிலாக நமக்குத் தெரியும்.
எனவே ஆரம்பம், முடிவு என்று எப்படிப் பார்த்தாலும், எல்லைக்கு அப்பால் செல்ல லிங்க வடிவம் ஒரு நுழைவாயிலாக இருக்கிறது. எனவே படைப்பாக வெளிப்படும்போதும் அது நீள்வட்ட வடிவமாக இருக்கிறது, கரைந்து போவதற்கு முன்பு அதன் கடைசி வடிவமும் நீள்வட்டமாக இருக்கிறது. எனவே படைப்பின் ஆதியும் அந்தமும் லிங்க வடிவத்தில் இருப்பதால், எல்லையற்று போவதற்கு, லிங்கவடிவம் ஒரு நுழைவாயிவாகப் பார்க்கப்படுகிறது.” - சத்குரு
சம்ஸ்கிருதத்தில் 'த்யான' என்றால் தியானம், 'லிங்கம்' என்றால் வடிவம்.
லிங்கம் ஒரு முழுமையான நீள் வட்ட வடிவத்தில் இருக்கும். இந்த ஒரு வடிவத்தில்தான், ஒரு தரம் சக்தியூட்டப்பட்டால், அது சக்தியின் நிரந்தர உறைவிடமாக இருக்கும். இந்த வடிவம், புராணங்களில் சிவனுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் இந்த ஒரு வடிவத்தில்தான் சக்தி நிரந்தரமாக இருக்கும்.
லிங்கத்தை உருவாக்கும் யோக விஞ்ஞானம், இந்த அறிவின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. தியானலிங்கம், பிராணப்பிரதிஷ்டையின் மூலம் உயிரோட்டம் உள்ள வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் உள்ள சக்தியும், உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அது காலத்தால் வெளியேறாமல், தியானலிங்கத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே தியானலிங்கத்திற்கு பூஜைகளோ, சடங்குகளோ தேவையில்லை. தியானலிங்கத்தில் இருக்கும் சக்திநிலை குறைந்தபட்சம் 5000 வருடங்களுக்கு அழியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிங்க வடிவம் மட்டுமே, சக்திநிலையை உச்சக்கட்ட தீவிரத்திற்கு எடுத்துச் சென்றாலும், தன் லிங்க வடிவத்தை இழக்காமல் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று சத்குரு விவரிக்கிறார். அதற்கும் அப்பால் அது வடிவமற்ற நிலைக்கு நகர்கிறது. தியானலிங்கத்தின் வெளி வடிவமான கறுப்பு 'கிரானைட் கல்', இந்த சக்தி நிலைக்கு வெளியே இருக்கும் வெறும் சாரம் மட்டுமே. அந்த கறுப்பு கல் அங்கிருந்து நீக்கப்பட்டாலும் கூட அங்கிருக்கும் சக்திநிலை அழியாது. அது என்றென்றும் நிரந்தரமாக, அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும்.
தியானலிங்கம், யோக விஞ்ஞானங்களின் சாரம். உள்நிலை சக்திகளின் உச்சகட்டமான வெளிப்பாடு.