ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்திற்கு, 2008ம் வருடத்திற்கான இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார் (IGPP) விருது ஜுன் 5ந் தேதி, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
பசுமைக்கரங்கள் திட்டம் மக்களிடையே சுற்றுப்புற விழிப்புணர்வை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் முயற்சியை பெருமளவில் மேற்கொண்டதை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது ஐந்து லட்ச ரூபாயையும், ஒரு வெள்ளித் தாமரைக் கோப்பையையும் உள்ளடக்கியது. புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் அன்று நடந்த விழாவொன்றில் முன்னாள் ஜனாதிபதி A.G. அப்துல் கலாம் அவர்களால் இந்த விருது வழங்கப்பட்டது. உலகச் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் பொருட்டும், தாங்கள் இவ்விருது பெறுவதை முன்னிட்டும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், ஜுன் 5 அன்று, தமிழ்நாட்டில் 32 இடங்களில் மரக்கன்றுகளை நட்டது.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், 1987 ஆம் ஆண்டு இந்த விருதை (IGPP) துவக்கி வைத்தது. இந்த தேசிய விருது, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, பராமரிப்பு, மறுஉருவாக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றில் அரும்பணி புரியும் தனிநபர் அல்லது அமைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கானவரை தேர்ந்தெடுக்கும் முன் அவர்கள் செய்த வேலையின் பயன், அதன் புதுமை, பயன் பெறும் நபர்கள் அதாவது பெண்கள், கிராமப்புறத்தினர், நகர்புறத்தில் வாழும் ஏழை மக்கள் மற்றும் இந்த அமைப்பினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் இந்தத் திட்டத்தின் நிரந்தரத் தன்மை ஆகிய அனைத்தும் அலசி ஆராயப்படுகிறது.
இந்தப் பசுமைக் கரங்கள் திட்டம், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஈஷா பௌண்டேஷனால் ஏற்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாத்து சரியான ஆரோக்கிய நிலையை உருவாக்கும் பொருட்டு பசுமையை அதிகரிக்கவும், மண்வளத்தை நிலைப்படுத்தவும், இயற்கை வளங்களை சரியான முறையில் மேலாண்மை செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கிறது.
இதன் வடிவமாக பசுமைக்கரங்கள் திட்டம், அது ஆரம்பிக்கப்பட்ட 2004ம் வருடத்திலிருந்து 82 லட்சம் மரக்கன்றுகளை, 20 லட்சத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் மேலானவர்களைக் கொண்டு நட்டுள்ளது. 2006ஆம் வருடத்தில் இரண்டரை லட்சத்திற்கும் மேலான தன்னார்வத் தொண்டர்கள், 3 நாட்களில் 8,56,000 மரக்கன்றுகளை நட்டனர். இச்செயல் கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. பசுமைக்கரங்கள் திட்டம் அரசாங்கம், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து பல்வேறு சுற்றுச்சூழல் நிகழ்வுகளில் நகர்புறங்களைப் பசுமையாக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்துவருகிறது.
ஈஷா தொண்டு நிறுவனம், மதச்சார்பறற, பொதுநலச்சேவை புரியும் நிறுவனமாகும். இது தன்னை உணர்ந்த ஞானியான சத்குரு ஐக்கி வாசுதேவ் அவர்களால் நிறுவப்பட்ட ஒன்று. இது மனிதனின் அனைத்து நலன்களையும் கருத்தில் கொண்டுள்ளது. இது முற்றிலும் இலாபமற்ற தன்னார்வத் தொண்டர்களால், மனிதவள மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நிறுவனமாகும். ஈஷா சமூகநலத் திட்டங்கள் என்பது ஈஷா தொண்டு நிறுவனத்தில் சமூக மேம்பாட்டிற்காக நிறுவப்பட்ட ஒரு கிளையாகும். இதன் முக்கிய நோக்கம் இந்தியாவில் நலிந்த சமுதாயத்தினரிடம் ஆரோக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் நலம் ஆகியவற்றை மேம்படுத்துவதாகும். இதன் பொருட்டு 2,50,000 தன்னார்வத் தொண்டர்கள் செயல் புரிந்து வருகின்றனர். பசுமைக்கரங்கள் திட்டம், கிராமப் புத்துணர்வு இயக்கம் மற்றும் ஈஷா வித்யா கல்வி நிறுவனங்கள், ஈஷா சமூகநலத் திட்டங்களின் மூன்று பகுதிகளாக உள்ளன. இவை கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வை உருமாற்றம் செய்யும் முயற்சியில், ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகவும், உணர்வுப்பூர்வமானவைகளாகவும் உள்ளன.